கோவை: தவெக தலைவர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்கு போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதன்முறையாக வரும் சட்டமன்றத் தேர்தலில் களம் காண்கிறார். இதற்காக விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள் தீவிர பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.
வரும் தேர்தலில் திமுக-தவெக இடையே தான் போட்டி என்று தவெக.,வினர் கூறி வரும் நிலையில், விஜய் எந்தெத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்டால் அது விவிஐபி தொகுதியாகும் என்று தவெகவினர் போஸ்டர் ஒட்டியிருந்தனர். இந்த நிலையில், தற்போது மீண்டும் தவெக.,வினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
தெற்கில் இருந்து திருப்பம் – நீங்களே முதலமைச்சர் என்பது மக்களின் விருப்பம் என அந்த போஸ்டரில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
உக்கடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 8-வது வார்டு தவெக.,வினர் இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். தமிழக மக்களின் காப்பாளராகவும், தொகுதி வேட்பாளராகவும் விஜய் கோவை தெற்குத் தொகுதியில் களம் காண வேண்டும் என தொண்டர்கள் தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே விஜய்யின் அரசியல் நகர்வுகள் உற்று நோக்கப்பட்டு வரும் நிலையில், கோவை போன்ற ஒரு முக்கிய தொழில் நகரத்தில் தொண்டர்கள் இத்தகைய போஸ்டர்களை ஒட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொண்டர்களின் இந்த விருப்பத்திற்கு கட்சித் தலைமை என்ன பதில் சொல்லப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

