கோவை: புலி படத்திற்கு வாங்கிய சம்பளத்தில் 15 கோடி ரூபாயை மறைத்ததாக விஜய்க்கு விதிக்கப்பட அபராதத்தை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நிலையில், அவரது கடைசி படம் என்று அறிவிக்கப்பட்ட ஜனநாயகனுக்கு சென்சார் போர்டு முட்டுக்கட்டை போட்டது.
இதனை எதிர்த்து நீதிமன்றம் சென்ற விஜய் பின்னடைவை சந்தித்தார். இதனிடையே, புலி பட விவகாரத்திலும், வருமான வரித்துறையை எதிர்த்து நீதிமன்றம் சென்ற விஜய், அதிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

புலி படத்திற்கு வாங்கிய சம்பளத் தொகையில் ரூ.15 கோடியை மறைத்ததாக நடிகரும் தவெக தலைவருமான விஜய்க்கு வருமானத்துறை ரூ.1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்திருந்தது.
இதனை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், குறிப்பிட்ட காலகெடுவிற்குள் தான் வருமான வரித்துறை அபராதம் விதித்துள்ளது என்று கூறிய உயர்நீதிமன்றம், விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் செல்லும் என்று கூறியதோடு, அவர் அந்த அபராதத்தை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதற்கு எதிரான விஜய் தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

