கோவை: நடிகர் விஜய் உச்சத்தில் இருக்கிறார். அது அறியாமையின் உச்சம் என்று கோவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 6.64 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவக் கட்டிடங்களை திறந்து வைத்து உயர்நிலை மருத்துவக் கருவிகளை வழங்கினார். மேலும் ரூ.2.44 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட நவீன நீராவி சலவை கூடத்தையும் 1.20 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட கண்ணோக்கும் பல் மருத்துவமனை நிலையத்தையும் திறந்து வைத்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஒரே நாளில் ரூ.12 கோடி மதிப்பில் பல்வேறு சுகாதாரத் திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.9 கோடி மதிப்பில் கழிவுநீர் தேங்காத வகையில் கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
விஜய் பிறப்பதற்கு முன்
ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகையை வாங்கிக்கொண்டு எனக்கு வாக்களியுங்கள் என்று விஜய் பேசுவது அறியாமையின் உச்சம். விஜய் பிறப்பதற்கு நான்கு வருடங்களுக்கு முன்பே கருணாநிதி தமிழ்நாட்டில் ஆற்றி இருக்கக்கூடிய சாதனைகளை அவர் தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.
திமுகவின் தலைவராக கருணாநிதி, கடந்த 1970ஆம் ஆண்டே இந்தியாவில் குடிசைகளே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கினார்.
அதனை தற்போது நம்முடைய முதலமைச்சர் மேம்படுத்தி நவீன மையமாக்கி நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் ஆக மாற்றி 400க்கும் மேற்பட்ட சதுர அடியில் வீடுகளை கட்டிக் கொடுத்து மக்களுக்கு மகிழ்ச்சி, வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
பல்வேறு துறைகளில் மேம்பாட்டுப் பணிகளை, அந்தக் காலத்தில் இருந்து செய்து வந்ததால் தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி, இந்திய அளவில் தற்பொழுது உயர்ந்துள்ளது. எனவே திராவிட இயக்க ஆட்சி என்னென்ன செய்ததோ அதை எல்லாம் புரிந்து கொண்டு விஜய் பேசினால் நன்றாக இருக்கும். என்றார்.

