கோவை: கோவை பார்க் கல்வி குழுமத்தில் 10 மாணவ, மாணவிகளின் ஓராண்டு கல்விக்கட்டணம் ரத்து என முதன்மை செயல் அதிகாரி அனுஷாரவி அறிவித்துள்ளார்.
கோவை பார்க் கல்வி குழுமத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு “ஐகானிக் மாம் 2026” விருது வழங்கும் விழா, கல்லூரி அரங்கத்தில் விமர்சயாக நடைபெற்றது. கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் ரவி மற்றும் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் அனுஷா ரவி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் ‘துர்கா’ என்ற பெயரில் சாதனைப் பெண்களைக் கௌரவித்து வரும் நிலையில், இந்த ஆண்டு மாணவ, மாணவிகளின் தாயார்களைக் கௌரவிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கில் இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்காக மாணவ, மாணவிகள் தங்கள் தாயார் குறித்து பேசிய காணொளிகள் வரவேற்கப்பட்டன. பெறப்பட்ட 752 காணொளிகளில், முதல் கட்டமாக 35 காணொளிகள் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் சமூக வலைதள வாக்கெடுப்பு மூலம் இறுதிப் பட்டியலாக 10 சிறந்த காணொளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
விழாவின் சிகர நிகழ்வாக, அந்த 10 சிறந்த மாணவ, மாணவிகளின் தாயார்களும் மேடைக்கு அழைக்கப்பட்டு அவர்களுக்குக் கிரீடம் சூட்டப்பட்டு, கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மாணவ, மாணவிகள் தங்கள் தாயார் குறித்துப் பேசிய உணர்ச்சிப்பூர்வமான காணொளிகள் திரையிடப்பட்டபோது, அரங்கமே நெகிழ்ச்சியில் ஆழ்ந்தது. அந்தத் தருணத்தில் மேடையில் பேசிய டாக்டர் அனுஷா ரவி, சாதனை படைத்த அந்த 10 மாணவ, மாணவிகளின் ஓராண்டு கல்விக்கட்டணத்தை முழுமையாக ரத்து செய்வதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த எதிர்பாராத அறிவிப்பு தாய்மார்களையும் மாணவ, மாணவிகளையும் ஆனந்தக் கண்ணீரில் நனைய வைத்தது.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மேடைப் பேச்சாளர் சாந்தாமணி பேசுகையில், இந்த நிகழ்வு தன்னையே கண்கலங்க வைத்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.
மகளிர் தினத்தின் போராட்ட வரலாற்றையும் பெண்களின் சாதனைகளையும் விளக்கிய அவர், பெற்றோர்கள் உயிரோடு இருக்கும்போதே அவர்களைக் கௌரவிக்க வேண்டும் என்றும், காலம் கடந்த பின் வருந்துவதில் பயனில்லை என்றும் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
கல்விக்கட்டண ரத்து மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகளால் இந்த மகளிர் தினக் கொண்டாட்டம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது.

