கோவை: கோவை தடாகம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானையை பார்த்து பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், பன்னீர்மடை, வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து சேதங்களை விளைவித்து வருகின்றன. விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
தடாகம் அடுத்த பன்னீர்மடை, நஞ்சுண்டாபுரம், வரபாளையம் ஆகிய பகுதியில் ஒற்றைக்காட்டு யானை அடிக்கடி ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துவதோடு மாட்டு கொட்டகைக்குள் வைக்கப்பட்டிருக்கும் மாட்டு தீவனங்களையும் தின்று செல்கிறது.
இந்நிலையில் பன்னீர்மடை, வரப்பாளையம் பகுதியில் நேற்றிரவு மீண்டும் ஒற்றைக் காட்டுயானை ஊருக்குள் வந்துள்ளது. அதனை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடியுள்ளனர். பின்னர் பட்டாசு வெடிக்கப்பட்டதை தொடர்ந்து யானை வனப்பகுதிக்குள் சென்றுள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அதே சமயம் யானை வரும் பொழுது ஒருவர் யானையைப் பார்த்து கல்லை வீசிய காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
அடிக்கடி ஊருக்குள் வரும் இந்த ஒற்றை காட்டுயானை பிடித்து வேறு எங்காவது விட வேண்டும் அல்லது யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறாத வண்ணம் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் விவசாயிகளும் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


