கோவை: கோவை அருகே 2 ஆயிரம் கிலோ ஜெலட்டின் வெடி மருந்து குச்சிகளை கடத்தி சென்ற வேன் பிடிபட்டதில் ஓட்டுநரிடம் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் தீவிரவாத செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து கைது செய்யவும், தமிழக அரசு சார்பில் தீவிரவாத தடுப்பு பிரிவு செயல் பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் குறைந்ததற்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. அதில் கோவையில் இருந்து லாரி மூலம் கேரளாவிற்கு ஜெலட்டின் வெடிபொருள் கடத்தப்படுவதாக கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜெலட்டின் கடத்திச் செல்லும் லாரியை பிடிக்க அதிரடி நடவடிக்கையில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் இறங்கினர்.
இன்று அதிகாலை கேரளாவிற்கு லாரி செல்லும் வழியில் மதுக்கரை அருகே தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினர் கண்காணித்தனர்.
அப்போது அதிகாலை 4 மணிக்கு ஒரு லாரி அந்த வழியாக வந்தது.
காவல் துறையினர் அந்த லாரியை தடுத்து நிறுத்தினர். லாரி ஓட்டுனரிடம் லாரியை சோதனை நடத்த வேண்டும் என கூறினர்.
இதனால் லாரி ஓட்டுனர் அதிர்ச்சி அடைந்தார். உடனே போலீசார் லாரியை சோதனை செய்தனர். அப்போது லாரிக்குள் ஜெலட்டின் குச்சிகள் பெட்டி பெட்டியாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இவற்றின் மொத்த எடை 2 ஆயிரம் கிலோ இருக்கும் என கூறப்பட்டது. உடனே தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் ஜெலட்டின் வெடி மருந்து குச்சிகள் கடத்தப்பட்ட லாரியை மதுக்கரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
லாரியை ஒட்டி சென்ற ஓட்டுநர் சுபேரையும் மதுக்கரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அங்கு அவரிடம் மதுக்கரை போலீசார் மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்..
லாரியில் கொண்டு செல்லப்பட்ட ஜெலட்டின் வெடி மருந்து குச்சிகள் கேரளாவில் உள்ள கல்குவாரிக்கு மலைகளை உடைக்க பயன்படுத்த கொண்டு செல்லப்படுவதாக ஓட்டுநர் சுபேர் கூறியதாக கூறப்படுகிறது.
இதற்கு உரிமம் உள்ளதா? 2 ஆயிரம் கிலோ வெடி மருந்து ஜெலட்டின் குச்சி கொண்டு செல்ல உரிய ஆவணங்கள் வைத்து உள்ளார்களா ? என்று விசாரணை நடைபெறுகிறது.
மேலும் அதன் உரிமையாளர் குறித்தும் விசாரணை நடக்கிறது. இன்று அதிகாலை நடந்த இந்த சம்பவம் மதுக்கரை அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.