2,191 கிலோ கஞ்சா… கோவையில் தீயிட்டு கொளுத்திய போலீஸ்!

கோவை: கோவையில் 2191 கிலோ எடையிலான கஞ்சா பாய்லர் தொழிற்சாலையில் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று தீயில் அழிக்கப்பட்டது.

கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய மாவட்ட போலீசாரால் கடந்த காலங்களில் கஞ்சா தொடர்பாக சோதனைகள் நடத்தப்பட்டது. இதில், 1317 கஞ்சா வழக்குகள் பதிவு செய்து 2191 கிலோ எடையிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த கஞ்சா பண்டல்கள் அனைத்தும் போதை பொருள் அழிப்பு குழு தலைவரான கோவை சரக போலீஸ் டிஐஜி சசிமோகன் தலைமையில் நேற்று கோவை அடுத்துள்ள செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு பாய்லர் தொழிற்சாலையில் தீயில் அழிக்கப்பட்டது. அரசு அனுமதி பெற்ற இந்த தனியார் நிறுவனத்தில், சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பான முறையில் அழிப்பு செய்யப்பட்டது.

கோவை, திருப்பூர் நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக போலீசார் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன் இது போன்ற கஞ்சா அழிப்பு நடவடிக்கை மூன்று முறை நடந்தது. கோவை, நீலகிரி, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 797 கஞ்சா வழக்குகள் பதிவானது.

இதில், பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 1624 கிலோ கஞ்சா ஏற்கனவே அழிக்கப்பட்டது. தற்போது 4வது முறையாக மொத்தமாக கஞ்சா குவியல்கள் பாய்லர் தொழிற்சாலையில் தீயில் அழிக்கப்பட்டது.

Recent News

Video

Join WhatsApp