கோவை: கோவையில் பேக்கரியில் இருந்த எண்ணெய் சட்டிக்குள் கையை விட்டு ரகளை செய்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை திருச்சி சாலையில் சுற்றித்திரிந்த 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நேற்று திடீரென அவ்வழியாக வந்த பேருந்தை நிறுத்தி ரகளையில் ஈடுபட்டார்.
பின்னர் அங்கிருந்த குப்பைத் தொட்டியில் கிடந்த உணவு கழிவுகளை எடுத்துச் சாப்பிட்டார். தொடர்ந்து அங்கிருந்த பேக்கரிக்குள் புகுந்தார்.
அங்கு சட்டியில் எண்ணெய் கொதித்துக்கொண்டிருந்தது. இதனையறியாமல், அவர் கொதிக்கும் எண்ணெய் சட்டிக்குள் கையைவிட்டு அலறித்துடித்தார்.
பேக்கரி ஊழியர்கள் அவரை வெளியேற்றிய நிலையில், அவர் பேக்கரி அருகே உயிரிழந்து கிடந்தார்.
இதுகுறித்த தகவலின் பேரில் ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர் யார்? அவர் உயிரிழந்தது எப்படி என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.