கோவை: கோவையில் 5 வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்ததைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் உறுப்புதானம் செய்ததன் மூலம் 4 பேருக்கு புதிய வாழ்வு கிடைத்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் விக்னேஷ் . இவரது மகன் சிவாதித்யா. இவர் அண்மையில் தனது தாத்தாவுடன் சென்றபோது சாலை விபத்தில் சிக்கினார்.
தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக நீலாம்பூர் அருகே உள்ள ராயல் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைக்கு பலனின்றி, சிறுவன் கடந்த 12ம் தேதி மூளைச்சாவு அடைந்தான்.
இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் தங்களது மகனின் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையம் (TRANSTAN) வழிகாட்டுதலின்படி, பல்துறை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு சிறுவனின் கல்லீரல், 2 சிறுநீரகங்கள் மற்றும் இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளை பாதுகாப்பாக அகற்றினர்.
இதில் ஒரு சிறுநீரகம் அதே மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டது. அந்த சிறுநீரகம் அங்கு சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளிக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மற்றொரு சிறுநீரகம், கல்லீரல் மற்றும் இதயம் ஆகிய உறுப்புகள் சேலம் மற்றும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு வைக்கப்பட்டன.
5 வயது சிறுவனின் உறுப்புதானம் மூலம் 4 பேருக்கு புதிய வாழ்வு கிடைத்துள்ளது.

