பல்லடம்: பல்லடத்தில் தெருநாய்கள் வாயில் நுரை தள்ளிய நிலையில் செத்து விழுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்து காமராஜ் நகர் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
இந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்பும் பொதுமக்களையும், பள்ளி முடிந்து வீடு தனியாக திரும்பும் மாணவர்களையும் இந்த தெருநாய்கள் அச்சுறுத்தி வருகின்றன.
இதனிடையே, காமராஜ் நகரில் நேற்று 5 தெருநாய்கள் வாயில் நுரை தள்ளியபடி செத்துக்கிடந்தன. இது குறித்து நகராட்சிக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் அந்த நாய்களின் உடல் அப்புறப்படுத்தப்பட்டது.
இன்று மேலும் 3 தெருநாய்கள் வாயில் நுரை தள்ளியபடி செத்து விழுந்தன. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் அங்கு சென்ற நகராட்சி அதிகாரிகள் நாய்களின் உடலை மீட்டனர். மேலும், தெருநாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டனவா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.