கோவை: கோவை சிறு, குறு உருக்கு தொழில்களுக்கு மோப்பெரிபாளையத்தில் தனி சிறப்புத் திறன் மேம்பாட்டு மையம் அமைக்க தமிழ்நாடு அரசு ரூ.23.85 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வந்தன. பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், இயங்கி வரும் நிறுவனங்கள் ‘உயிர் பிழைப்பே சந்தேகம்’ என்ற சூழலில் இருந்தபோது, அரசு அவர்களுக்கு பெரும் ஆதரவை வழங்கி உள்ளது.




இதனிடையே உருக்கு தொழிலுக்கான தனி சிறப்புத் திறன் மையம் அமைப்பதற்காக ரூ.23.85 கோடி நிதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த மையம், பவுண்டரி டெவலெப்மண்ட் பவுண்டேசன் மற்றும் டிஐடிசிஓ இணைந்து உருவாக்கப்படவுள்ளது. இந்த மையம் கொடிசியா தொழிற்பேட்டையில், மோப்பெரிபாளையத்தில் உருவாக்கப்பட உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,
“இந்த மையம், சிறு, குறு மற்றும் நடுத்தர உருக்கு தொழில்களுக்கு தொழில்நுட்ப மற்றும் பயிற்சி ஆதரவுகளை வழங்கும். உயர்நிலை இயந்திரங்கள், சோதனை ஆய்வகங்கள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் ஆகியவை இதில் அமையும்.
உருக்கு தொழிலில் உருவாகும் கழிவுகளை மீண்டும் பயன்படுத்துதல், மறுசுழற்சி செய்தல் போன்ற முயற்சிகளுக்கு இந்த மையம் முன்மாதிரியாக இருக்கும். வடிவமைப்பு, மேம்பாடு, வார்ப்புத் தயாரிப்பு சரிபார்ப்பு ஆகியவற்றுக்கான நவீன உற்பத்தி வசதிகளும் அமைக்கப்படுகின்றன.
இதற்காக அரசு ரூ.23.85 கோடி வழங்கியுள்ளது. மீதமுள்ள ரூ.2.65 கோடியை பவுண்டரி டெவலெப்மண்ட் பவுண்டேசன் ஏற்கிறது.” என்றனர்.

