கோவை: கோவையில் சினிமா பட பாணியில் பள்ளி வாகனத்தின் டயர் ஒன்று கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை அவிநாசி சாலையில் புதிதாக திறக்கப்பட்ட ஜி.டி மேம்பாலத்தில் நல்லாம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் வேன் ஒன்று சென்று கொண்டு இருந்தது.
அப்போது திடீரென எதிர்பாராத விதமாக வேனில் இருந்த ஒரு சக்கரம் கழன்று தனியாக உருண்டோடியது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் வாகனத்தை சாமர்த்தியமாக கட்டுப்படுத்தி பாலத்தின் ஓரத்தில் பாதுகாப்பாக நிறுத்தினார்.
மேலும், சக்கரம் கழன்ற வேகத்தில் பாலத்தின் சரிவில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உருண்டு சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் லாபகமாக அந்த டயரை பிடித்தார். பின்னர் அதனை டிரைவரிடம் ஒப்படைத்தார்.
வாகனத்தில் பள்ளி மாணவர்கள் இல்லாததாலும், சாலையில் யார் மீதும் அந்த டயர் மோதாததாலும் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்துகள் தவிர்க்கப்பட்டது.

