கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் 45வது பட்டமளிப்பு விழ நடைபெற்றது. இதில் 4,434 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 45வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில், சென்னை தோல் ஏற்றுமதி கழகத்தின் நிர்வாக இயக்குனர் செல்வம், தமிழ்நாடு ஆளுநர் ரவி ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.
விழாவில், தோல் ஏற்றுமதி கழக நிர்வாக இயக்குனர் செல்வம் பேசுகையில், “இப்பல்கலைக்கழகத்தில் படித்த மாணவன் நான். இன்று இதே பல்கலை பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
30 ஆண்டுகளுக்கு முன் உங்களைப் போல் அமர்ந்திருந்த போது, மேடையில் பேசிக் கொண்டு இருந்தவர்களின் வார்த்தையை நான் கேட்கவில்லை. ஆனால், இங்கு இருக்கக் கூடிய மாணவர்கள் ஒருபோதும் அப்படி இருக்கக் கூடாது. இரைதேடிச் சென்ற பறவை, கூடு திரும்பியதாக இன்று நான் உணர்கிறேன்.” என்று நெகிழ்ச்சி பொங்கப் பேசினார்.
இவ்விழாவில், பதிவாளர் தமிழ் வேந்தன், வேளாண் பல்கலை பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.