கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில்
கிரைம் பிராஞ்சு அதிகாரி என்று கூறி ரியல் எஸ்டேட் அதிபர் மனைவியை பணம் கேட்டு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் இமானுவேல். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பியூலா அண்ண மரியாள் (வயது 50).
சம்பவத்தன்று வீட்டில் அண்ண மரியாள் இருந்தபோது 45 வயது மதிக்கத்தக்க நபர் வந்தார்.
அவர் பியூலாவிடம் தான் டெல்லி க்ரைம் பிராஞ்சு போலீஸ் அதிகாரி என கூறியுள்ளார்.
இதனால் பியூலா எதற்காக இங்கு வந்து உள்ளீர்கள் என்று கேட்டு உள்ளார். அப்போது அந்த நபர் உங்கள் முகவரியிலிருந்து இலங்கைக்கு வெடிமருந்து பொருள் பார்சல் அனுப்பப்பட்டு உள்ளது. அடுத்த 10 நாட்களுக்குள் மேலும் ஒரு பார்சல் அனுப்ப நீங்கள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.
மிரட்டல்
மேலும், நீங்கள் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது. வழக்கில் 15 நாட்களுக்குள் தண்டனை கிடைத்துவிடும் என்றும் கூறியுள்ளார்.
நாங்கள் எந்த பார்சலும் அனுப்பவில்லை என்று பியூலா கூறியுள்ளார். அதற்கு அந்த நபர் பியூலாவை மிரட்டியதோடு பணமும் கேட்டு வற்புறுத்தி உள்ளார். இதனால் பியுலா அவரது உறவினரை செல்போனில் தகவல் தெரிவித்து வரவழைத்தார்.
உடனே உறவினர் வந்து அந்த நபரிடம் கிரைம் பிராஞ்சு போலீஸ் ஐடி கார்டை காட்டும்படி கூறியுள்ளார். அப்போது அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசவே ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சென்று அந்த நபரைப் பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது அவரிடம் கிரைம் பிராஞ்சு போலீஸ் ஐடி கார்டுக்கு பதில் தேசிய குற்றப்புலனாய்வு ஏஜென்சி என்ற தனியார் டிடெக்டிவ் ஏஜென்சி கார்டு இருந்தது தெரியவந்தது. இதைப் பயன்படுத்தி பியூலாவை மிரட்டியுள்ளார் என்பதும் தெரியவந்தது.
ஆசிரியர் கைது
அந்த நபர் யார் என்று விசாரணை செய்த போது, அவரது பெயர் அகஸ்டின் பிஜு (வயது 45) என்பதும், சிங்காநல்லூரை அடுத்த உப்பிலிபாளையம் பகுதியில் அவரது தம்பியுடன் தங்கி இருந்ததும் தெரியவந்தது.
ஈரோட்டைச் சேர்ந்த இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் டியூசன் ஆசிரியராக வேலை பார்த்து வந்து உள்ளார். அவரது தம்பி சிங்காநல்லூரில் தங்கி வேலை பார்த்து வருவதால் அவரை பார்ப்பதற்காக கோவை வந்து உள்ளார்.
இந்த நிலையில் தான் பியூலாவை மிரட்டி பணம் பறிக்க முயன்ற போது சிக்கியுள்ளார்.
இவர் வேறு யாரிடமும் இதுபோன்று மிரட்டி பணம் பறித்து உள்ளாரா என்று கோணத்தில் விசாரணை நடத்திய போலீசார் அகஸ்டின் பிஜு மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை சிறையிலடைத்தனர்.