கோவை: கோவை காந்திபுரத்தில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் நடந்து சென்ற பெண் பலியான வழக்கில் மதுபோதை டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை எட்டிமடை பகுதியை சேர்ந்தவர் பூவாம்மாள் (51). இவர் சித்தாபுதூர் பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் வீட்டு வேலைக்காக சித்தாபுதுார் பகுதியில் அவர் நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ வேகத்தடையின் மீது ஏறியபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் அந்த வழியாக நடந்து சென்று பூவாம்மாள் ஆட்டோவின் அடியில் சிக்கிக்கொண்டார். இந்த விபத்தில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Advertisement

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஆட்டோ டிரைவரை மீட்டனர். அப்போது அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பூவாம்மாள் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து ஆட்டோவை ஓட்டி வந்த சித்தாபுதூரை சேர்ந்த தங்கவேல் (57) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.