கோவையில் நண்பனை கொன்று கிணற்றில் வீசிய நபர்கள் சரணடைந்தனர்

கோவை: இரண்டு மாதங்களுக்கு முன்பு நண்பரை கொன்று கிணற்றில் வீசிய இரண்டு நபர்கள் செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்

நெல்லை நாங்குநேரியைச் சேர்ந்த டேவிட் என்பவரின் மகன் பாலமுருகன். இவரின் தந்தை மலுமிச்சம்பட்டி அருகே குதிரை பண்ணையில் வேலை செய்து வருவதால் இவர் குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். பாலமுருகன் கொலை,திருட்டு வழக்கில் கைதாகி நெல்லை சிறையில் இருந்து உள்ளார்.அப்போது பாளையங்கோட்டையை சேர்ந்த முருகப்பெருமாள் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பாலமுருகனுக்கு போன் செய்த முருகப்பெருமாள் தனக்கு தனது நண்பர் ஜெயராமனுக்கு கோவையில் வேலை வாங்கி தருமாறு கூறி உள்ளார்.அதனால் பாலமுருகன் அவரை மலுமிச்சம்பட்டிக்கு கிளம்பி வரச் சொல்லி இருக்கிறார்.இதை அடுத்து நெல்லையில் இருந்து இரண்டு பேரும் கோவை வந்துள்ளனர்.

பாலமுருகன் மதுவை வாங்கிக் கொண்டு பண்ணை அருகில் இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்று உள்ளார். அங்கு மூவரும் மது அருந்தி கொண்டு இருந்த போது முருகப்பெருமாளுக்கு, ஜெயராமனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த முருகப்பெருமாள் தாக்கியதில் ஜெயராமன் சுருண்டு விழுந்து இறந்து விட்டார்.இதனால் பயந்து போன இருவரும் அவரது உடலை கல்லை கட்டி அருகில் உள்ள கிணற்றில் போட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இரண்டு மாதங்கள் கழித்து செட்டிபாளையம் காவல் நிலையத்திற்கு வந்த பாலமுருகன்,முருகப்பெருமாள் ஆகியோர் காவல்துறையிடம் இந்த சம்பவம் குறித்து நேரில் சரண் அடைந்து உள்ளனர்.இதை அடுத்து செட்டிபாளையம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.இதை அடுத்து கிணற்றில் கிடக்கும் ஜெயராமனின் உடலை மீட்க கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அங்கு வந்த தீயணைப்பு துறையினர் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் மோட்டார் வைத்து தண்ணீரை வெளியே எடுத்தால் தான் சடலத்தை மீட்க முடியும் என ஆலோசனை தெரிவித்த நிலையில் செட்டிபாளையம் போலீசார் குற்றவாளிகளை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து கிணற்றிலிருந்து நீரை வெளியேற்றி சுமார் 3 மணி நேரம் கழித்து இறந்த ஜெயராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recent News

Video

Join WhatsApp