கோவை: அரசு அதிகாரியாக, ஒரு கோப்பில் போடும் ஒவ்வொரு கையெழுத்தும் பலரது வாழ்க்கையை மாற்றும் திறன் கொண்டது என்று Group 2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சங்கர் ஐஏஎஸ் ஆகாடமியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் பேசியுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய Group 2 மற்றும் 2A தேர்வுகளில் வெற்றி பெற்ற கோவை சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் 45 மாணவர்களைப் பாராட்டும் விழா சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் கிராஸ் கட் சாலை கிளையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கோவை மாநகர (வடக்கு) காவல் துணை ஆணையர் தேவநாதன் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றியாளர்களைக் கௌரவித்தார்.
சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் கோயம்புத்தூர் கிளையின் தலைவர் ஆர்.எஸ்.அருண், தலைமை நிர்வாக அதிகாரி யாஸ்மி அருண், ஆசிரியர்கள் மற்றும் விருந்தினர்கள் ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
முதலாவதாக ஆர்.எஸ். அருண் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தனது மாணவர்கள் மற்றும் 9 ஆசிரியர்கள் இப்போது தமிழக அரசு அதிகாரிகளாகி இருப்பதைப் பார்ப்பது மிகப்பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், வெற்றியாளர்கள் தங்களது பயணத்தை இதோடு நிறுத்திக்கொள்ளாமல், Group 1 தேர்வையும் இலக்காகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆசிரியர்களாக இருந்து இந்த தேர்வில் வெற்றி பெற்ற பேர் தங்கள் தேர்வுக்குத் தயாரான விதம், சவால்கள், அகாடமியின் வழிகாட்டுதல் மற்றும் வெற்றி குறித்துப் பகிர்ந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினர் தேவநாதன் தனது காவல் பணி குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதோடு, வெற்றியாளர்களும், மாணவர்களையும் உயர்ந்த இலக்குகளை அடைய தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்றும், அரசு அதிகாரியாக, ஒரு கோப்பில் நீங்கள் போடும் ஒவ்வொரு கையெழுத்தும் பலரது வாழ்க்கையை மாற்றும் திறன் கொண்டது. எனவே, எப்போதுமே ஒரு நிமிடம் சிந்தித்து, சரியானதைச் செய்யுங்கள் என்று அறிவுரை வழங்கினார்.



