கோவை: முட்டை வியாபாரம் செய்யலாம் என்று கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் ராம்செட். இவர் அவருக்கு தெரிந்தவர்கள் மூலம் பலரை தொடர்பு கொண்டு தான் ஒரு ஆசிரியர் என்றும் மேற்படி முட்டை வியாபாரம் செய்து வருவதாகவும் நாம் இணைந்து வியாபாரம் செய்தால் வருகின்ற லாபத்தை பிரித்து கொள்ளலாம் என்று பலரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பி பெரியநாயக்கன்பாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆறு ஏழு நபர்கள் வியாபாரத்தை துவக்கி உள்ளனர். அவ்வாறு பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு முதல் இரண்டு மாதங்களில் முறையாக முட்டைகளை வழங்கியுள்ளார்.
அதனை தொடர்ந்து சரிவர முட்டைகளை அனுப்பாமல் லாப பணத்தையும் வழங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ராம்சேட் பற்றி விசாரிக்கும் பொழுது அவர் ஏற்கனவே மோசடி வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்தவர் என்று தெரிய வந்துள்ளது.
இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அவரிடம் ஒவ்வொருவரும் ரூ.20 லட்சம், ரூ.30 லட்சம் என்று சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் பணத்தை கொடுத்துள்ளதாகவும் தங்களது பணத்தை அவரிடம் இருந்து மீட்டு தர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.