கோவை: கோவைக்கு மூன்றாவது நாளாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகத்தை தொடர்ந்து நீதிமன்றத்திற்கு மிரட்டல் வந்துள்ளது
கோவையில் கடந்த இரண்டு தினங்களாக வெடிகுண்டு மிரட்டல்கள் இ-மெயில் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வந்ததை தொடர்ந்து இன்று மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் இரண்டு தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரதியார் வரிகளை மேற்கோள் காட்டி இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த காவல் துறையினர் சோதனை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மறுநாள் நேற்றும் மாலை 4.45 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என மீண்டும் தமிழில் இ-மெயில் மூலம் மிரட்டல் அனுப்பப்பட்டது. காவல்துறை சோதனை நடத்தியதில் புரளி என தெரியவந்தது.
இதே போன்று நேற்று மண்டல பாஸ்போர்ட் கேந்திரா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. நேற்று மோப்ப நாய் உதவிகளுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். பின்னர் புரளி என தெரியவந்தது. இது குறித்து பீளமேடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு இன்று இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்தான தகவல் ரேஸ்கோர்ஸ் காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு, வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலிசார் அங்கு சென்று தீவிர சோதனை நடத்தினர்.
ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. எனவே இதுவும் வழக்கம் போல புரளி என்று தெரியவந்தது.
இந்த நிலையில் காவல் துறையினருக்கு சவால் விடும் வகையில் மூன்றாவது நாளாக இன்றும் இ-மெயில் மூலம் மிரட்டல் அனுப்பப்பட்டு உள்ளது.எனவே இது தொடர்பாக காவல் துறையினர் மற்றும் சைபர் கிரைம் போலீசார் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.