கோவை: தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இசைக்கலைஞர்கள் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து நாதஸ்வரம் மற்றும் வாசித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கோவை நாதஸ்வரம், தவில் இசைக்கலைஞர்கள் நலச்சங்கத்தின் இன்று தங்களது இசைக் கருவிகளுடன் கோவை ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.
அவர்கள் திடீரென ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தாங்கள் கொண்டு வந்திருந்த நாதஸ்வரம் மற்றும் தவில் கருவிகளை வாசிக்கத் தொடங்கினர்.
போதிய வேலைவாய்ப்பு இல்லாமல், வாழ்வாதாரம் குன்றிய நிலையில், தங்களுக்கு இலவச வீட்டுமனை, பேருந்து கட்டண சலுகை, கோவில்களில் நிரந்தர வேலை, இசைக் கலைஞர்களுக்கு இலவசமாக வாத்திய கருவிகள் வழங்குதல் உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நூதனமான முறையை அவர்கள் கையில் எடுத்தனர்.
தொடர்ந்து, இசைக்கருவிகளை வாசித்தபடியே ஆட்சியர் அலுவலகம் சென்ற அவர்கள், தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
இதுகுறித்து இசைக்கலைஞர்கள் கூறியதாவது:-
போதிய வருமானம் இல்லாத நிலையில், வீட்டு வாடகை செலுத்தக் கூட சிரமப்பட்டு வருகிறோம். மாத சம்பளம் வருவது போன்று அந்தந்த ஊர்களில் உள்ள கோவில்களில் எங்களுக்கு வேலை வழங்க வேண்டும். சூலூரில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் எங்களுக்கு வீடுகள் ஒதுக்கித்தர வேண்டும்.
தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய பல்வேறு விசேஷங்களுக்கும் கேரள மாநில இசையான செண்டை மேளம் ஆகியவற்றை பயன்படுத்துவது தான் தங்களின் இந்த நிலைமைக்கு காரணம். இதனால் பாரம்பரிய இசைக் கலைஞர்கள் பாதிப்படைகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.