கோவை: காந்திபுரம் மேம்பாலத்தில் இருந்து கடந்த 7ம் தேதி கீழே குதித்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் அருகே உள்ள பாரதிநகர் 3வது வீதியை சேர்ந்தவர் ரமேஷ் (43). இவரது மகன் ஜெகன் (17).
காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் டுடோரியல் மையத்தில் பிளஸ் டூ தேர்வுக்காக படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 7ம் தேதி வீட்டில் இருந்து சைக்கிளில் வெளியில் சென்ற ஜெகன் கிராஸ்கட் ரோட்டில் சித்தி விநாயகர் கோயில் அருகில் மேம்பாலத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு திடீரென்று கீழே குதித்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஜெகன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

