கோவை: டிரைவருக்கு திடீர் வலிப்பு ஏற்பட்ட நிலையில் அதிவேகமாக சென்று சுவற்றில் மோதி கவிழ்ந்த காரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன…
நீலகிரி மாவட்டம் ஊட்டி எமரால்டு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன்(48).இவர் இன்று காலை அவிநாசி செல்வதற்காக காரில் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் உள்ளிட்ட மூவருடன் மேட்டுப்பாளையம் வழியாக சென்று கொண்டிருந்தார். கார் சரியாக அன்னூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது ஈஸ்வரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் நிலை தடுமாறிய கார் அதிவேகமாக சென்று சாலையோரத்தில் இருந்த சிறு பாலத்தின் தடுப்பு சுவற்றில் மோதி சுமார் 10 அடிக்கும் மேல் பறந்தது.
மேலும்,சாலையோரம் இருந்த சக்தி தியேட்டரின் சுவற்றில் மோதி கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த மூவருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது, சாலையில் நடந்து சென்ற முதியவரும் அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் உயிர் தப்பினார்.
அக்கம்பக்கத்தினர் உடனடியாக காரில் இருந்த மூவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்கள் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினர்.
இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இச்சம்பவம் குறித்த சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிசிடிவி காட்சிகள் இதோ…