கோவை: கோவையில் சூலூரில் வீட்டுக்குள் நுழைய முயன்ற முள்ளம்பன்றியை வன உயிரின ஆர்வலர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கோவை, சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் திடீரென நுழைந்த முள்ளம் பன்றியால் வீட்டில் இருந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து ஃபிரண்ட்ஸ் ஆப் வைல்ட் லைஃப் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்குச் சென்ற வன உயிரின ஆர்வலர்கள் அங்கு இருந்த முள்ளம்பன்றியை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் லாபகரமாக பிடித்து சாக்குக்குள் அடைத்து கோவை மாவட்ட வன அலுவலகத்தில் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் முள்ளம்பன்றியை வனத்துறையினர் தொண்டாமுத்தூர் அருகே போளுவாம்பட்டி பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள வனப்பகுதியில் விடுவித்தனர்.

