கோவை: ஐந்து நாள் சுற்றுப் பயணமாக ஊட்டி மலர் கண்காட்சியைத் தொடங்கி வைக்க வந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோவை விமான நிலையத்தில் தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி வருகிற 15ம் தேதி தொடங்குகிறது. இக்கண்காட்சி 11 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் மலர் கண்காட்சியைத் தொடங்கி வைக்க முதலமைச்சர் ஸ்டாலின் ஐந்து நாட்கள் சுற்றுப் பயணமாக இன்று ஊட்டிக்குச் செல்கிறார்.
இதற்காக அவர் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தார். இங்கிருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக ஊட்டி சென்றார்.
முதலமைச்சருக்கு, கோவை விமானநிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், காவல்துறை ஆணையாளர் சரவணசுந்தர், ஐ.ஜி செந்தில்குமார், தி.மு.க துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா, அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த முதலமைச்சருக்கு வழி நெடுகிலும், மேள தாளங்கள் முழங்க தி.மு.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.