கோவை: கோவை, சூலூர் அருகே ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவனை தாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், சியாமளாபுரத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் அன்னூர் அருகே உள்ள அரசு பள்ளி விடுதியில் தங்கி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதியில் இருந்து சொக்கம்பாளையம் வந்தார். அப்பொழுது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவரிடம் சிறுவன் லிப்ட் கேட்டு உள்ளார்.
உடனே அவனை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட வாலிபர் சோமனூரில் வந்து மது பாட்டில்களை வாங்கினார். பின்னர் அவர் அந்த சிறுவனை சூலூர் அருகே காடாம்பாடி பகுதியில் அழைத்துச் சென்று உள்ளார்.
அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அந்த சிறுவனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து கட்டாயப்படுத்தி உள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து தப்பிச் செல்ல முயன்று உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் சிறுவனை கட்டையால் சரமாரியாக தாக்கி காயப்படுத்தி விட்டு தப்பி சென்று விட்டார்.
படுகாயம் அடைந்து கிடந்த சிறுவனை அங்கு இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் தங்கராமன், மேற்பார்வையில் சூலூர் ஆய்வாளர் லெனின் தலைமையில் 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டது.
அவர்கள் தீவிர விசாரணை நடத்தி சொக்கம்பாளையம் பிரிவில் இருந்து சூலூர் வரை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சிறுவனை அழைத்துச் சென்று ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி தாக்கிய வாலிபர் அடையாளம் தெரிந்தது. அவரை காரணம் பேட்டை நாளோடு சந்திப்பில் காவல் துறையும் மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் வசந்தகுமார் என்பதும், கறிக்கடையில் வேலை செய்யும் அவர் மது போதையில் மாணவரிடம் தகாத செயலில் ஈடுபட முயன்றதும், அவன் மறுத்ததால் தாக்கியதும் தெரியவந்து உள்ளது. இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வசந்தகுமாரை காவல் துறையினர் கைது செய்தனர்.