கோவை: கோவையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சமூகநீதி சாசனம் வெளியிடப்பட்டது
கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சமூகநீதி சாசனம் என்ற கோரிக்கைகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது. மாநில பொதுச் செயலாளர் சுகந்தி அதனை வெளியிட்டார் இதில் பல்வேறு முற்போக்கு இயக்கங்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் சுகந்தி, 2026 தேர்தலுக்குப் பிறகு பொறுப்பேற்க கூடிய அரசாங்கம் சாதிய கொடுமைகள் குறித்தும் அதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், குறிப்பாக பட்டியல் மற்றும் பழங்குடியின சமூகத்தினர் முன்னேற்றத்தில் எந்தெந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இந்த கோரிக்கை சாசனத்தை வடிவமைத்துள்ளதாக தெரிவித்தார். இதனை அனைத்து அரசியல் கட்சியினருக்கும் வழங்க உள்ளதாகவும் கூறினார்.
இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் சமத்துவ உரிமை கொடுக்கப்பட்டாலும் அது முறையாக அனைத்து மக்களிடமும் உள்ளதா என்று கேட்டால் இல்லை என்றும் சாதிய பெயர்களால் பல்வேறு உரிமைகள் முடக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். கல்வி வேலைவாய்ப்பு வாழ்வாதாரம் வர்த்தகம் போன்ற விஷயங்களில் பட்டியல் மற்றும் பழங்குடி இன மக்களுக்கான முறையான ஒதுக்கீட்டை செய்ய வேண்டும் என்றார். கல்வி என்பது இந்த சமூகத்தில் அனைவருக்கும் சமமாக பகிர்ந்து அளிக்கப்படுவது இல்லை என்று குற்றம் சாட்டிய அவர் கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னை ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் 13 ஆயிரத்து 526 மாணவர்கள் டிராப் அவுட் ஆகி இருப்பதாகவும் அதிலும் அதிகப்படியானோர் பட்டியல் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள் என தெரிவித்தார்.
மேலும் தாங்கள் தமிழகத்தில் நடத்திய ஆய்வின்படி பல்வேறு பள்ளிகளில் தற்பொழுதும் பட்டியலின மாணவர்களும் இதர சமூகத்தைச் சார்ந்த மாணவர்களும் தனித்தனி வரிசையில் நின்று தான் சத்துணவை வாங்குவதாகவும் தலித் சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
பட்டியல் இன மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு ஏற்ப்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் துணை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில் கடந்த திமுக அரசு ஒரு சட்டத்தை இயற்றியதை வரவேற்கிறோம் அதே சமயம் அந்த சட்ட முறையாக அமல்படுத்தப்பட வேண்டும் அதற்காக ஒதுக்கப்படக்கூடிய நிதி முழுமையாக அதற்கு எனவே பயன்படுத்தப்பட வேண்டும் வேறு திட்டத்திற்கு அதனை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் கடந்த காலங்களில் சாதிய ஆணவ படுகொலைகள் நடந்துள்ளது தமிழகத்திலும் சாதி ஆணவ படுகொலைகள் நடந்துள்ளது என தெரிவித்த அவர் இதற்கு என தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் ஒரு ஆணையத்தை நியமித்துள்ளது எனவே அதே போன்று அடுத்த வரக்கூடிய ஆட்சியாளர்கள் சாதிய ஆணவ படுகொலைகளுக்கு எதிராக தனி சட்டத்தை இயற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
சாதி மறுப்பு திருமணங்கள் செய்து கொள்பவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் மேலும் அதற்காக மாவட்டங்கள் முழுவதும் ஒரு சிறப்பு செல் அமைக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ள நிலையிலும் அது பல்வேறு மாவட்டங்களில் இல்லை எனவே அடுத்து வரக்கூடிய அரசு அதனை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் பட்டியல் மற்றும் பழங்குடி இன மக்களுக்காகவே ஒதுக்கப்பட்ட நிலங்களை உரிய முறைப்படி அவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தற்போது பல்வேறு நிலங்கள் சாதிய ஆணவ சக்திகள் கையில் இருக்கிறது அதனை மீட்டு பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் தொழில் முனைவோர்களாக இருக்கக்கூடிய பட்டியல் சமூக மக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும் தொழில் பயிற்சி கொடுக்க வேண்டும் என தெரிவித்தார். SC ST வன்கொடுமை தடுப்புச் சட்டம் நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்த அவர் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு SC ST நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தற்பொழுது இருக்கக்கூடிய சட்டமுறைகளின் படி சாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான விசாரணைகள் நடத்தப்பட்டு தண்டனைகள் கொடுக்கப்படுகின்றதா என்றால் அது இல்லை என்றும் பலமுறை சாட்சியங்களை பாதுகாக்க முடிவதில்லை என்றும் சாட்சியங்கள் மிரட்டப்படுகிறார்கள் என்றும் தெரிவித்த அவர் சாட்சியங்களை பாதுகாப்பதற்கான சிறப்பு சட்டங்கள் இல்லை என்றார்.
சாட்சியங்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்தால் அவர்கள் மிரட்டப்படுகிறார்கள் எனவே அவர்கள் பின்வாங்கவும் செய்து விடுகிறார்கள் என்று கூறிய அவர் முறையாக விசாரணை நடத்தி தண்டனை பெற்றுத் தந்தாலே குற்றங்கள் குறைக்கப்படும் அதையும் தாண்டி சாட்சிகளை பாதுகாப்பதற்கான சிறப்பு சட்டங்கள் வேண்டும் என வலியுறுத்தினார்.

