கோவை: கோவை அருகே ஏற்பட்ட விபத்தில் தந்தை – மகன் படுகாயமடைந்தனர். அந்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள தட்டாம் புதூர் பகுதியில், அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, தந்தை-மகன் சென்ற இருசக்கர வாகனம் மற்றும் எதிரே வந்த பொலிரோ வாகனம் மீது மோதிய விபத்தின் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், சூலூர், கருமத்தம்பட்டி அடுத்த தட்டாம் புதூர் வழியாகத் தந்தை மற்றும் மகன் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது, அதே திசையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, முன்னால் சென்ற வாகனத்தைக் கவனிக்காமல் கட்டுப்பாட்டை இழந்தது. எதிர்பாராதவிதமாக அந்த கார், தந்தை-மகன் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.
மோதிய வேகத்தில் அந்த கார் நிற்காமல், எதிரே வந்து கொண்டு இருந்த பொலிரோ பிக்-அப் வாகனத்தின் மீதும் பயங்கரமாக மோதி நின்றது.
இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த தந்தை மற்றும் மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டுப் படுகாயம் அடைந்தனர். இதைப் பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக 108 ஆம்புலன்ஸிற்குத் தகவல் தெரிவித்தனர். காயம் அடைந்த இருவரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து அருகில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகி உள்ளது. கார் வந்த வேகம் மற்றும் மோதிய விதம் காண்போரை நடுங்கச் செய்யும் வகையில் உள்ளது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது.






Comments are closed.