Header Top Ad
Header Top Ad

பெண்களே உஷார்… கோவையில் தனியாக இருந்த பெண்கள் மீது மயக்க ஸ்பிரே அடித்து கொள்ளை முயற்சி!

கோவை: கோவையில் வீட்டில் தனியாக இருந்த பெண்கள் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே அடித்து நகை பறிக்க முயற்சி அரங்கேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கே.கே.புதூரை அடுத்த நஞ்சம்மாள் தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி. கடந்த ஜனவரி மாதம் ஒரு பெண் தனலட்சுமியின் வீட்டிற்கு வந்து வீடு வாடகைக்கு வேண்டும் என்று கேட்டுள்ளார்.

தொடர்ந்து வீட்டைச் சுற்றிப்பார்த்துவிட்டு அட்வான்ஸ் தொகையையும் கொடுத்துள்ளார். இதனிடையே நேற்று மீண்டும் அந்த பெண் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் தனலட்சுமியும் அவரது மகளும் மட்டும் தனியாக இருந்துள்ளனர்.

Advertisement

Single Content Ad

வீடு வேண்டாம் என்ற அந்த பெண் அட்வான்ஸ் தொகையை ஜிபே மூலமாகத் திரும்பப்பெற்றுக்கொண்டார்.

திடீரென வீட்டின் கதவைச் சாத்திய அவர், தனலட்சுமி மற்றும் அவரது மகள் முகத்தில் மயக்க ஸ்பிரேவை அடித்து நகையை பறிக்க முயன்றார்.

அதிர்ந்துபோன தனலட்சுமி கூச்சலிட்டவே அந்த பெண் பயந்துபோய் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.

இது குறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் தனலட்சுமியின் சகோதரர் ராஜன் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிந்து, காவல் ஆய்வாளர் வெற்றிச்செல்வி விசாரணை நடத்தினார்.

தனலட்சுமி பணம் அனுப்பிய ஜிபே எண்ணை வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது ராம் நகரைச் சேர்ந்த மீனாட்சி (49) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து, மீனாட்சியை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மகளிர் சிறையில் அடைத்தனர்.

கணவரை இழந்த மீனாட்சி மகன் மகளுடன் வசித்து வருகிறார். வாடகைக்கு வீடு பார்க்கச் சென்றவர் அங்கே தனலட்சுமி அவரது மகளுடன் ,தனியாக இருப்பதைப் பார்த்து திடீரென இவ்வாறு செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

போலீஸ் விசாரணையின் மீனாட்சி போலீசார் காலில் விழுந்து கதறி அழுது உள்ளார்.

Recent News

Single Sidebar Ad

Latest Articles