கோவை: கோவையில் சினிமா பாணி நடந்த விபத்தில் கார் மீது மோதி அதன் கூரை மீதே பறந்து விழுந்த இளைஞரின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் கார் மீது மோதிய விபத்தில், பைக்கை ஓட்டி வந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு காரின் கூரை (Roof) மீதே விழுந்து பயணம் செய்த அதிர வைக்கும் காட்சி வெளியாகி உள்ளது.
கோவை – பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரிமியர் மில் அருகே இன்று ஒரு கார் வளைவில் திரும்பிப் பாதையை மாற்ற முயன்றது. அப்போது அதே சாலையில் மிக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம், எதிர்பாராத விதமாகக் காரின் பின்னால் பலமாக மோதியது.
மோதிய வேகத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபர் காற்றில் தூக்கி வீசப்பட்டார். நேராகக் காரின் மேல் பகுதியில் (Roof) விழுந்த அவர், கார் நிற்கும் வரை அதன் கூரை மீதே சில மீட்டர் தூரம் பயணம் செய்தார். இதைப் பார்த்த அங்கு இருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
சினிமா காட்சியைப் போல நடந்த இந்த பயங்கர விபத்தில், காரின் மேல் விழுந்த வாலிபருக்கு நல்வாய்ப்பாகத் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செட்டிபாளையம் போலீசார், விபத்துக்கு உள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் சமீபகாலமாக மேம்பாலங்கள் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட சாலைகளில் இளைஞர்கள் மிக அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதால் இது போன்ற விபத்துக்கள் தொடர்கதையாகி வருகின்றன.
சாலை சந்திப்புகள் மற்றும் வளைவுகளில், வாகனங்களின் வேகத்தைக் குறைக்க வேண்டும் எனப் போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
பிரிமியர் மில் போன்ற பகுதிகளில் சிக்னல் மற்றும் வேகத்தடை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



