கோவை: வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் ஐந்தாவது முறையாக நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடப் போவதாக கோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மே18 இனப்படுகொலை நாளையொட்டி கோவை கொடிசியா மைதானத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழின பேரெழுச்சி பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து மேடையில் உரையாற்றிய சீமான், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என பலமுறை தேர்தலில் போட்டியிட்டு தோற்றோம்.மீண்டும் ஐந்தாவது முறையாக தனித்து களத்தில் நிற்கப் போகிறோம் என்றால் அது இந்தியா அரசியல் வரலாற்றிலேயே நாம் தமிழர் கட்சி மட்டும் தான்.
எந்த சமரசமும் இல்லை என் மக்களோடு சேர்ந்து மக்களுக்காக 2026 இல் படைப்போம் புதிய அரசியல் வரலாறு. நீங்கள் பறித்துக் கொண்ட அதே விவசாயி சின்னத்திலே தேர்தல் களத்தில் நிற்க போவதாக தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் சொன்னதைப்போல வந்துட்டேன் சொல்லு திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என தெரிவித்த சீமான், அந்த விவசாயிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை ஆனால் இந்த விவசாயிக்கும் எனக்கும் சம்பந்தம் இருக்கிறது. என் எண்ணம் மட்டும் சின்னம் இல்லை. சின்னமே நான்தான். உறவை மீட்போம் உலகை காப்போம் என்பதை முன்வைத்து இந்த தேர்தலில் நாங்கள் களத்தில் நிற்போம்.
234 இடங்களிலும் போட்டியிடுவோம் 117, ஆண்களும், 117 பெண்களும், அதில் 134 இடங்கள் இளைஞர்களுக்கு இடம் ஒதுக்கப்படும். மாணவர்கள் பெண்களுக்கு இடம் ஒதுக்கப்படும் மற்றவர்களுக்கு தேர்தல் நமக்கு நிலம் காக்கும் போர் என தெரிவித்தார்.