கோவை: விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்தவர் அமுல் கந்தசாமி என்றும், அவரது குடும்பத்தினருக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும் முன்னால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
Advertisement

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்.ஜி.ஆர்
இளைஞர் அணி துணைச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டம், வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அமுல் கந்தசாமி உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்தவர் அன்புச் சகோதரர்
அமுல்கந்தசாமி.

மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட கழகப் பணிகளை ஆற்றியவர்.
அதேபோல், கோவை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராகவும், தற்போது வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் நல்ல முறையில் மக்கள் பணியாற்றிவர்.
அன்புச் சகோதரர் அமுல்கந்தசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.