கோவை: மீண்டும் தேர்தல் அறிக்கை கொடுத்தால் திமுக அரசை நம்பமாட்டோம் என்று அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்ட சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் 16,500 ரூபாய் அலுவலக உதவியாளர் நிலையில் 15,700 ரூபாய் என்ற அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் அப்பொழுது பத்தாண்டு பணி முடிந்த தகுதியுள்ள பணியாளர்களை 50% சேர்க்க வேண்டும்
அங்கன்வாடிக்கு கோடை விடுமுறை தற்காலிக பணி நீக்க காலத்தில் பிழைப்பூதியம் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி தேசிய மருத்துவ காப்பீடு மகப்பேறு விடுப்பு 12 மாதம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 500 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீஸார் அங்கன்வாடி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் ஊழியர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட ஊழியர்களை போலீஸார் கைது செய்தனர். இந்த நிகழ்வில் சத்துணவு ஊழியர்கள் ஒப்பாரி வைத்தனர்.
இது குறித்து பேட்டி அளித்த சத்துணவு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை எனவும் உடனடியாக தங்கள் கோரிக்கைகளை ஏற்று நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இத்தனை ஆண்டுகளாக கோரிக்கைகள் வைத்தும் அரசின் மனம் இறங்கவில்லை என்று குறிப்பிட்ட அவர்கள் மீண்டும் தேர்தல் அறிக்கை என்று திமுக அரசு அறிவித்தால் அதனை நாங்கள் நம்ப மாட்டோம் திமுக அரசிற்கு ஆதரவளிக்க மாட்டோம் என தெரிவித்தனர்.

