கோவை:கோவையில் ரேஷன் கடைகளில் பிரதமர் மோடி புகைப்படம் வைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக-வினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர். அனைத்து ரேஷன் கடைகளிலும் பிரதமர் மோடி புகைப்படம் வைக்க வலியுறுத்தியும், அன்னயோஜனா திட்டம் பற்றிய தகவல் பலகை வைக்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி கோவை சிவானாந்தா காலனி பகுதியில் இன்று பாஜக ஒன்றிய அரசு நலத்திட்ட பிரிவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணிக்காக வந்த போலீசார் உரிய அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபடுவதாக கைது செய்ய முயன்றனர். இதனால் போலீசாருக்கும், பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது.
அப்போது பாஜகவினர் அப்பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். அங்கு போடப்பட்டிருந்த சாமியான பந்தல் மற்றும் பாஜக கொடி பேனர்களை போலீசார் அகற்றியதாக பாஜகவினர் குற்றம் சாட்டினர்.
இதனைத்தொடர்ந்து அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக-வினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

