கோவை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை ஈடுபட்டனர்.
கோபாலபுரம் பகுதியில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதனிடையே இந்த அலுவலகத்திற்கு இன்று ஒரு கடிதம் வந்தது.
பெயர் விவரம் குறிப்பிடாத அந்த கடிதத்தில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து, ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் அலுவலகத்திற்கு வந்தனர்.
மோப்ப நாய்கள் உதவியுடன் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பழைய மற்றும் புதிய கட்டடங்கள், கார் பார்க்கிங் மற்றும் அங்குள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் வெடிகுண்டு தொடர்பான பொருட்கள் சிக்காத நிலையில் அது புரளி என்பது தெரியவந்தது.
தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.