கோவை: UPSC தேர்வில் பெரியார் பெயருக்கு பின்னால் சாதியப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த விவகாரத்தில் யாராக இருந்தாலும் சாதிய பெயர் குறிப்பிடுவது கட்டாயம் கிடையாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
Advertisement

அப்போது அவர் பேசியதாவது,
‘முன்னாள் அமைச்சரும் நீண்ட கால நண்பருமான பொள்ளாச்சி ஜெயராமனின் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை வந்துள்ளேன். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு மதுரையில் அறுபடை வீடு முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான கால்கோள் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளேன். உலகம் முழுவதிலும் இருந்து முருக பக்தர்கள் அதில் கலந்து கொள்கின்றனர். அந்த நிகழ்வில் அறுபடை வீடுகள் அலங்காரம் வைக்கப்பட உள்ளது. விழாவினை இந்து முன்னணியின் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார். அதில் கலந்து கொண்ட பின்பு திருநெல்வேலி செல்ல உள்ளேன்.
டாஸ்மாக் ஊழலைப் பொறுத்தவரை பலமுறை பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் அமலாக்கத்துறை அதை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அதில் சம்பந்தப்பட்ட துணை முதல்வரின் நண்பர்களான ரிதீஸ், ஆகாஷ் அவர்களை விசாரித்தால் தெரியும் என்று அமலாக்கத்துறை கூறியுள்ளது. அவர்கள் லண்டனுக்கு போய்விட்டார்கள் என கூறுகின்றனர். சிலர் இங்கு இருக்கின்றனர் என்றும் கூறுகின்றனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மோடிக்கும் ED க்கும் பயப்பட மாட்டோம் என கூறினார்கள். ஆனால் 2011 ஆம் வருடம் தேர்தலின் போது கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துவதற்கு மாடியில் இடி ரையிடும் கீழே பேச்சுவார்த்தையும் ஓடிக் கொண்டிருந்தது. அன்றைக்கு EDக்கு பயந்து தான் பேச்சுவார்த்தை முடித்தார்களா என்பது தெரியவில்லை. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அன்றிலிருந்து இன்றுவரை EDக்கு பயம் இருப்பதால் தான் பயப்பட மாட்டோம் என கூறியுள்ளார். ஏன் ரித்தீசும், ஆகாசும் வெளிநாட்டுக்கு பயந்து போக வேண்டிய அவசியம் என்ன. ஊடகங்கள் தான் அதைக் கேட்க வேண்டும்.
யார் ஆட்சி செய்தாலும் எங்களை பொறுத்தவரை அமலாக்கத்துறை கண்டிப்பாக இருக்க வேண்டும்.
ராஜ்யசபா தேர்தல் கூட்டணி பொருத்தவரை நான் தனிப்பட்ட கருத்து சொல்ல முடியாது. தலைமை தான் முடிவு செய்யும். எங்களிடம் இருப்பது நான்கு சீட்டுகள். தலைமை என்ன சொல்லுதோ அதன்படி கேட்போம். நாங்கள் அதிமுகவோடு கூட்டணியில் இருக்கிறோம். அதிமுகவுக்கு ஆதரவு என கூறினால் ஆதரவு தருவோம்.
நகை கடன் விதிமுறைகளைப் பொறுத்தவரை நாங்களும் எங்களது கமிட்டியில் பேசி உள்ளோம். இதுகுறித்து நிதி அமைச்சர் அவர்களுக்கு கருத்துக்களை கூறுவோம். எவ்வளவு இலகுவாக ஆக்க முடியுமோ அதனை வலியுறுத்துவோம்.
நான் மாநில தலைவராக பொறுப்பேற்றது முதல் கூறி வருகிறேன். திமுக ஆட்சியால் மக்களுக்கு ஏராளமான சிரமங்கள் உள்ளது. சொத்துவரி பல மடங்கு கூட்டப்பட்டுள்ளது. மின்சார கட்டணம் ஆண்டுதோறும் ஆறு சதவீதம் அதிகரித்து வருகின்றனர். இதனால் தொழிற்சாலைகள் நடத்த முடிவதில்லை. சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு ,கட்டப்பஞ்சாயத்து, கஞ்சா கடத்தல் என அனைத்தும் இந்த ஆட்சியில் அளவுக்கு அதிகமாக போய் உள்ளது. சட்டம் ஒழுங்கு காவல்துறையினரால் பராமரிக்க முடியவில்லை. இந்த ஆட்சி மக்களுக்கு விரோதமாக உள்ளது. எனவே எல்லா கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.
மத்திய அரசு நிதி கொடுக்காததால்
எந்த மாணவர்களும் பாதிக்கப்பட மாட்டார்கள். ஏற்கனவே நமது முதலமைச்சர் டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு இது குறித்து பேசி இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். பிரதமர் அவர்கள் தனியாக கூட சந்தித்து பேசி உள்ளார். இது குறித்து பேசினாரா என்பதை முதலமைச்சர் தான் விளக்க வேண்டும். ஆண்டுதோறும் கொடுக்க வேண்டிய பணத்தை மத்திய அரசு கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறது.