கோவை: கோவையில் கடையில் துணி எடுக்க வந்த பெண் செல்போனை திருடிய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது
தமிழகத்தில், கோவை மாவட்டம் சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக திகழ்கிறது. இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளி உற்பத்தியின் தலை நகரம் என்று அழைக்கப்படுகிறது.
கோவை, மாநகர் மட்டுமல்லாமல் சுற்று வட்டார பகுதிகளிலும் ஏராளமான ஜவுளிக் கடைகள் உள்ளன.
இந்நிலையில் ஈச்சனாரி விநாயகர் கோவில் எதிரே ராமராஜ் என்பவருக்கு சொந்தமான மாவீ டெக்ஸ்டைல்ஸ் என்ற துணிக் கடை இயங்கி வருகிறது.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் துணி வாங்குவதற்கு ஒரு வாலிபருடன் பெண் ஒருவர் வந்துள்ளார். உள்ளே நுழைந்ததும் அங்கு பணி புரியும் கடை ஊழியரின் மொபைல் மேசையில் இருந்துள்ளது.
இந்நிலையில் துணியை வாங்குவதற்கு உள்ளே வந்த அந்தப் பெண் அங்கும் இங்கும் பார்த்துவிட்டு அதை யாரும் கவனிக்காத போது மேஜையில் இருந்த செல்போனை எடுத்து தனது கோர்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டுள்ளார்.
பின்னர் அவருக்கு வேண்டிய துணிகளை வாங்கிக் கொண்டு அங்கு இருந்து கிளம்பிச் சென்று விட்டார்.
இதனை அடுத்து கடை ஊழியர் அவரது செல்போனை தேடி உள்ளார். ஆனால் அவர் வைத்த இடத்தில் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து சக ஊழியர்கள் மற்றும் உரிமையாளரிடம் கூறி உள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்துள்ளனர்.
அப்பொழுது வாலிபருடன் வந்த பெண் தனது பாக்கெட்டில் செல்போனை எடுத்து போட்டுக் கொண்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சுந்தராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.