கோவை: மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) பட்ஜெட் மீதான தனது கருத்துகளை தெரிவித்துள்ளது.
2026-27ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் MSME துறைக்கு வரலாற்றுச் சிறப்பாக ரூ.10,000 கோடியும், குறுந்தொழில்களை ஊக்குவிக்க ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
மேலும், AI தொழில்நுட்பம் அனைத்துத் துறைகளிலும் செயல்படுத்தப்படும், இறக்குமதியாகும் லித்தியம் பேட்டரிகளுக்கு இறக்குமதி வரி விலக்கு வழங்கப்படும், தனி நபர் வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 வரை கால நீட்டிப்பு செய்யப்படும், வரி தாக்கல் வழிமுறைகள் எளிமையாக்கப்படும் ஆகிய அறிவிப்புகளை எங்கள் சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம்.
அதே நேரத்தில் தற்போது மிகுந்த ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தொழில் வளர்ச்சிக்கு ஆதாரமான மூலப் பொருட்களுக்கு சீரான விலை கிடைப்பதற்கான எவ்வித அறிவிப்பும் இல்லை. வங்கி வட்டி விதிகளில் எவ்வித மாற்றமும் இல்லாதது. MSME வளர்ச்சிக்கான பிரத்யேகமான வேறு அறிவிப்புகள் இல்லை.
மேலும், முத்ரா கடன் மற்றும் குறுந்தொழில்களுக்கான தனி வங்கிக் கிளை தேவை போன்ற தொழில் முனைவோரின் கோரிக்கைகள் குறித்து அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கடந்தாண்டு பட்ஜெட்டில் தொழில்முனைவோர் தங்கள் தொழிலுக்கான மூலப்பொருட்களை வாங்குவதற்கு கடன் அட்டைகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் தற்போது வரை செயல்படுத்தப்படாமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது.
இவ்வாறு சிவக்குமார் கூறினார்.

