கோவை: ஜவுளி துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மத்திய பட்ஜெட் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மத்திய பட்ஜெட் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பை உருவாக்கி வரும் ஜவுளித்துறையில் வேலைவாய்ப்பை மேலும் ஊக்குவிப்பதோடு ஏற்றுமதியை பெருக்குவதற்கான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளதாக கோவையைச் சேர்ந்த தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் தலைவர் துரைபழனிச்சாமி, மத்திய அரசின் பட்ஜெட் அறிக்கை ஜவுளித்துறையை சர்வதேச அளவில் ஊக்குவிப்பதற்கான பட்ஜெட்டாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், தேசிய ஃபைபர் திட்டத்தின் கீழ் இந்தியாவில் ஜவுளிக்கான மூலப்பொருட்கள் உருவாக்குவதை ஊக்குவிக்கப்படும் எனவும், இது ஜவுளித்துறை வளர்ச்சிக்கு பெரும் உறுதுணையாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
மேலும் SAMART திட்டத்தின் கீழ் ஜவுளி துறையில் திறன் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகமாகும் எனவும், கேப்பிட்டல் சப்போர்ட் திட்டத்தின் கீழ் ஜவுளி துறையில் நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை நிறுவ உதவும் என தெரிவித்தார்.
மேலும் உள்நாட்டு கார்கோ போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் கோஸ்டல் கார்கோ திட்டம் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஜவுளி வர்த்தகத்தை எளிதாக முன்னெடுத்திட ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை எளிமையாக்கும் அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜவுளித்துறை கிளஸ்டர்கள் என அழைக்கப்படும் கோவை கரூர் திருப்பூர் ஈரோடு ஆகிய பகுதிகளில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் வகையில் பிரத்தேக திட்டங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
கண்டெய்னர் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அதிகரிக்கப்படும் எனவும் மொத்தமாக ஜவுளி துறையினர் வரவேற்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

