கோவை: MSME துறைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என லகு உத்யோக் பாரதி தொழில் அமைப்பு வரவேற்றுள்ளது.
மத்திய பட்ஜெட் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளதாகவும், தொலைநோக்கு பார்வையுடன் தொழில்துறை வளர்ச்சிக்கான பல்வேறு அறிவிப்புகள் உள்ளதாகவும் லகு உத்யோக் பாரதி தொழில் அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த லகு உத்யோக் பாரதி தொழில் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கல்யாண சுந்தரம் பேசுகையில்,
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை சிறந்த நிறுவனங்களாக உருவாக்க பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், குறு தொழில்களுக்கென பிரத்தியேகமாக 2000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதும் வரவேற்கத்தக்க அம்சங்கள் என குறிப்பிட்டார்.
மேலும், சர்வதேச அளவில் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு அரசன் உதவியோடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொழில்துறையினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் எனவும், கண்டெய்னர் உற்பத்தி ஊக்குவிப்பு மூலம் ஏற்றுமதி மற்றும் கண்டெய்னர் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் எனவும், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப பயிற்சி தொழில் துறையினருக்கு வழங்குவதால் இத்துறை மேலும் நவீனமடையும் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைப்பின் செயற்குழு உறுப்பினர் சிவக்குமார், எம்எஸ்எம்இ துறையில் புதிய ஆர்டர்களை பெறுவது முக்கிய பிரச்சினையாக உள்ள நிலையில், Gem Portal இணைப்பின் மூலம் சிறிய நிறுவனங்களும் அரசின் ஆர்டர்களை பெற முடிவதாகவும், இதனால் விரைவில் உற்பத்திக்கான தொகை பெறப்பட்டு பயனடைவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் தொழில்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களோடு இணைத்து தொழிற் பயிற்சி வழங்கப்படுவது சிறந்த பயன் தரும் எனவும், வங்கி கடன் மற்றும் மானிய தொகை தொடரப்படுவதாக அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மொத்தமாக சிறு குறு நடுத்தர தொழில் துறைக்கு தொலைநோக்கு கொண்ட திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

