இந்தியாவிலேயே இலக்கியத்தில் உயரிய விருதான ஞானபீடம் விருது கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழுக்கு பெருமை சேர்த்த வைரமுத்து
அகிலன், ஜெயகாந்தனுக்கு அடுத்தபடியாக இந்த விருது கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு பிறகு தமிழருக்கு, தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விதமாக வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வைரமுத்துவுக்கு அரசியல் தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இது குறித்து பேசிய வைரமுத்து, எனக்கும் ஞானபீடம் மீது ஒரு மயக்கம்தான் என சொல்லிக் கொள்வதில் எந்த வெட்கமும் இல்லை

இந்தியாவின் 22 மொழிக்ளுக்கும் சேர்த்து வழங்கப்படும் ஒரே விருது ஞானபீடம், அதனால்தான் 23 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு இந்த விருது கிடைத்துள்ளது என கூறினார்.
செவியில் விழுந்து இதயம் நுழைந்து நட்பு
இதனிடையே வைரமுத்துவுக்கு வாழ்த்து கூறியுள்ள நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் எம்.பி., தனது எக்ஸ் தளப் பக்கத்தில், நெடிய பரம்பரை கொண்ட தமிழிலக்கியத்துக்கு மூன்றாவது முறையாக உயரிய இலக்கிய விருதான ஞானபீடம் கிடைத்திருக்கிறது.

ஜெயகாந்தன் பெற்ற முந்தைய ஞானபீடத்துக்குப் பிறகு, கால் நூற்றாண்டு கடந்து தமிழுக்கு இந்தப் பெரும்பெருமையைச் சேர்த்திருக்கிறார் என் ஆப்தர் கவிப்பேரரசு வைரமுத்து, ‘வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்’ என்கிற கவிச் சொற்களோடு என் செவியில் விழுந்து இதயம் நுழைந்து நட்பில் கலந்த நண்பரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன் என பதிவிட்டிருந்தார்.
மீண்டும் சீண்டும் சின்மயி
கமல்ஹாசனின் இந்த கருத்தை டேக் செய்த பின்னணி பாடகி, வைரமுத்துவை வசைபாடியுள்ளார். அவர் பெயரை குறிப்பிடாமல், கடவுளுக்காகவே இதை சொல்ல வேண்டும்…
பின்குறிப்பு : சினிமாவில் அதிகாரமும் செல்வாக்கும் கொண்ட ஆண்கள் அரசியலுக்கு வரும் போது கூட, “அவருடைய சொந்தமோ, வழிகாட்டியோ” தங்களை தவறாக நடத்தினார் என்று வெளிப்படையாக கூறும் பெண்களின் குரலை முற்றிலும் புறக்கணிப்பது மிகவும் கவலைக்குரியது. இது வாக்களிக்கும் பெண்களுக்கு ஒரு நினைவூட்டலாக இருக்க வேண்டும் — ஆண்கள் பெரும்பாலும் பெண்களின் பக்கம் நின்று பேச மாட்டார்கள் என்பதற்கான நினைவூட்டல்.
இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அவருடைய சொந்தக் கட்சியிலேயே இருக்கும் ஒரு பெண், அந்தக் கவிஞரின் பெயரை பொதுவாகவே வெளிப்படையாக கூறியிருந்தார்.

இறுதியில் என்ன நடக்கிறது என்றால், ஆண்கள் தங்களின் நண்பர்கள், வழிகாட்டிகள் என தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கே ஆதரவாக நிற்பார்கள். பல பெண்கள் மன உளைச்சலை அனுபவித்திருந்தாலும், அதை பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? என கடுமையாக சாடியுள்ளார்.
வைரமுத்து மீது மீடூ புகார் கூறியிருந்த சின்மயி, தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரமுத்துவுக்கு எதிராக விமர்சனங்களை பதிவு செய்து வருகிறார். தற்போது அவர் போட்ட பதிவில், வைரமுத்துவுக்கு கமல்ஹாசன் ஆதரவாக இருப்பதாக சொல்லாமல் சொல்லியுள்ளார். இவரது கருத்துக்கு நெட்டிசன்கள் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

