கோவை: தமிழ்நாட்டின் கடன் சுமையை குறைக்க வேண்டிய நிலையில், ஆண்டுதோறும் அதிகரித்து வருவது கவலைக்குரியது என்றும், வருவாய் ஈட்டுவதில் கவனக்குறைவு காணப்படுவதால் கடன் வாங்கும் அரசாக திமுக அரசு மாறிவிட்டது என்றும் கோவையில் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கோவை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து, தமிழக அரசின் 2026–27 நிதிநிலை அறிக்கையை கடுமையாக விமர்சித்தார்.
தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. தற்போது ரூ.9 லட்சத்து 29 ஆயிரம் கோடி கடன் உள்ளது. அடுத்தாண்டு அது ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
கடன் சுமையை குறைக்க வேண்டிய நிலையில், ஆண்டுதோறும் அதிகரித்து வருவது கவலைக்குரியது. வருவாய் ஈட்டுவதில் குறைவு காணப்படுவதால் கடன் வாங்கும் அரசாக திமுக அரசு மாறிவிட்டது.
உயர் கல்விக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட வெறும் ரூ.11 கோடி ரூபாய் மட்டுமே அதிகரித்துள்ளது. 47 சதவீதம் இருந்த வளர்ச்சி தற்போது 2 சதவீதம் குறைந்துள்ளது.
கைவினைத் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. கலைஞர் கைவினைத் திட்டத்தின் பெயரை மாற்றி ஏமாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோயில்கள் புனரமைப்புக்கு ரூ.8 ஆயிரத்து 100 கோடி செலவிட்டதாக கூறியிருப்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
விவசாய வளர்ச்சி வெறும் 3 சதவீதம் மட்டுமே உள்ளது. அது மத்திய அரசு வழங்கிய திட்டங்களின் பயனாக ஏற்பட்டுள்ளது.
கோவை மெட்ரோ
மத்திய அரசு கோவை, மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை ரத்து செய்துவிட்டதாகக் இன்றும் கூறுகிறார் தங்கம் தென்னரசு. மத்திய அரசு மெட்ரோ ரயில் மறு திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கக் கூறியுள்ளது. அதனை எந்த தேதியில் சமர்ப்பித்தார்கள் என்று குறிப்பிடவில்லை.
பீகாரில் பெண்களுக்கு ரூ.10,000 கொடுக்கப்பட்டது. மஹாராஷ்டிராவில் ரூ.2,100 கொடுக்கப்பட்டது. அதை யாரும் தடுக்கவில்லை. இப்போது முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசு தடுப்பதாகக் கூறுகிறார்.
அதனை யாரும் தடுக்கவில்லை. இந்த ஆண்டு மட்டும் தான் கோடைகாலம் தெரிந்ததா? என்பது தான் எங்கள் கேள்வி. இதெல்லாம் அரசியல். நாங்கள் ஆட்சிக்கு வரும்போது ரூ.2,000 கொடுப்போம்.
அங்கான்வாடி ஊழியர்கள்
சென்னையில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கோரிக்கை அரசு தீர்வு காணவில்லை. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் உணர வேண்டும்.
காங்கிரஸ் கட்சியில் குழப்ப நிலை நிலவுகிறது ஒவ்வொருவரும் தனித்தனியாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

