கோவை: கோவையில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மாநகர போலீசார் மண் கொண்டு சீரமைத்த வீடியோ காட்சிகள் வைரலாகி பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
உக்கடம்-சுங்கம் பைபாஸ் சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. கோவைப்புதூர்ம் குனியமுத்தூர், பேரூர், தொண்டாமுத்தூர், உக்கடம் மற்றும் கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வரும் வாகனங்கள் திருச்சி சாலை உள்ளிட்ட நகரப்பகுதிக்குள் வர பெரும்பாலும் இந்த சாலையைப் பயன்படுத்துகின்றன.
சமீபத்தில் சுங்கம் பைபாஸ் சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக ரவுண்டானா அமைக்கப்பட்டது. அப்போது அருகிலிருந்த சாலைகளும் சீரமைக்கப்பட்டன.
Advertisement

ஆனால், சில நாட்களிலேயே அந்த பகுதி குண்டும் குழியுமாக மாறியது. உக்கடத்திலிருந்து ரவுண்டானா நோக்கி வந்து, அரசு மருத்துவமனையை நோக்கிச் செல்ல இடதுபுறமாகத் திரும்பும் வாகன ஓட்டிகள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாகனத்தை இயக்கும் அளவுக்கு அந்த பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டது.
அதேபோல் சுங்கத்தில் இருந்து உக்கடம் நோக்கிச் செல்லும் வழியிலும் பள்ளங்கள் ஏற்பட்டன. இந்த சாலை குறித்து ஏற்கனவே நியூஸ் க்ளவுட்ஸ் கோயம்புத்தூர் செய்தித்தளம் விரிவான செய்தியைப் பதிவிட்டிருந்தது.
இதனை அறிந்த ரேஸ்கோர்ஸ் காவல் ஆய்வாளர் கந்தசாமி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் களத்தில் இறங்கினர்.

வாகன ஓட்டிகளின் சிரமத்தைப் போக்கும் விதமாக சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் மண்ணைக் கொட்டி தங்களால் இயன்றவரை அந்த பகுதியைச் சீரமைத்துள்ளனர்.
போலீசார் சாலையைச் சீரமைக்கும் வீடியோகாட்சிகள் வைரலாகிய நிலையில், பொதுமக்கள் பலரும் போலீசாருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தற்காலிகமாக இந்த சாலை சீரமைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மழைக்குள், மாநகராட்சி நிர்வாகம் பொறுப்புடன் இந்த சாலையை செப்பனிட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.