கோவை: கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சிறுவாணி அணையில் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சியின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது சிறுவாணி அணை. கோவை மாவட்டத்தின் எல்லையில், கேரளாவுக்குள் அமைந்துள்ள இந்த அணையின் மொத்த உயரம் 49.5 அடியாகும். தற்போது இந்த அணையின் நீர்மட்டம் 38.9 அடியை எட்டியுள்ளது.
Advertisement

அணையிலிருந்து நாள்தோறும் 100 எம்.எல்.டி நீர் எடுக்கப்பட்டு, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் இன்று சிறுவாணி அணையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், சிறுவாணி அணைக்கான நீர் வரத்து, மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, சிறுவாணி அணையிலிருந்து கோயம்புத்தூர் மாநகராட்சிக்கான தண்ணீர் செல்லும் நீர் திறப்பு பகுதி மற்றும் தண்ணீர் செல்லும் சுரங்கப்பாதை பகுதியினையும் (Tunnel) ஆய்வு மேற்கொண்டார்.
சிறுவாணி அணைப் பகுதியில் புதிதாக வர்ணம் பூசுதல் மற்றும் அணையில் படர்ந்துள்ள செடிகள், மரங்கள் அகற்றும் பணிகள் உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும், பார்வையிட்டு ஆய்வு செய்து, புனரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
சிறுவாணி அணையில் நீர் கசிவை சரி செய்வது தொடர்பாக உரிய விரிவான திட்ட அறிக்கையினை தயார் செய்வது தொடர்பாக கேரளம் மாநில நீர்வளத்துறையினர் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரசாந்த், மாநகர தலைமை பொறியாளர் விஜயகுமார், கேரளா நீர் வளத்துறையினர் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.