கோவை: கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய மண்டலத்திற்குட்பட்ட உக்கடம் பகுதியில் ரூ.21.56 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தினை மாநகராட்சி ஆணையாளர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கட்டுமானப் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.591.14 கோடி மதிப்பீட்டில் குறிச்சி மற்றும் குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் சுமார்30.53 எம்.எல்.டி கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு வீடுகளுக்கு பாதாள சாக்கடை திட்டத்திற்கான இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தெற்கு மண்டலம். வார்டு எண்.99க்குட்பட்ட போத்தனூர் அற்புகும் நகர் பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் உந்து நிலையத்தினையும் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் அனைத்து வீடுகளுக்கும் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் இணைப்பு வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

