coimbatore crime news: கோவையில் லிப்ட் கேட்பது போல் நடித்து ஸ்கூட்டர், செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை இடையர்பாளையம் மணிகண்டன் நகரை சேர்ந்தவர் கவின்(22). இவர் தனது உறவினர் ஒருவர் நடத்தி வரும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் கவின் தனது நண்பர் ஒருவரை அவரது வீட்டில் இறக்கிவிட ஸ்கூட்டரில் சென்றார். பின்னர் அவரை இறக்கி விட்டு குனியமுத்தூர் பி.கே.புதூர் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவரை 4 பேர் மறித்து லிப்ட் கேட்டனர். அதில் ஒருவருக்கு கால் வலி இருப்பதால் நடக்க முடியவில்லை என லிப்ட் தருமாறு கெஞ்சினர். இதனால் பரிதாபப்பட்ட கவின் அனைவரையும் ஸ்கூட்டரில் ஏற்றிக்கொண்டு சென்றார். அவர்கள் கேட்டு கொண்டதின்பேரில், இடையர்பாளையம் பிஎம்ஆர் ஜங்சன் அருகே உள்ள காலி இடத்தில் இறக்கிவிட்டார்.
வழிப்பறி
அப்போது திடீரென பைக் சாவியைப் பறித்து, கவினை மிரட்டி செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து 4 பேரும் ஸ்கூட்டரில் தப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த கவின் இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் கவினை மிரட்டி ஸ்கூட்டர், செல்போன் பறித்து தப்பியது குனியமுத்தூர் நரசிம்மபுரத்தை சேர்ந்த சிகாபுதீன்(21), குனியமுத்தூர் கிருஷ்ணசாமி நகரைச் சேர்ந்த ஹரீஷ் குமார்(18), குனியமுத்தூர் பிகே புதூரை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

