கோவை: கோவையில் போலீசாரின் ரோந்து பைக்கை திருடி வந்து, மற்றொரு நபரின் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, சிவானந்தா காலனி, டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோட்டைச் சேர்ந்த 27 வயது வாலிபர். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 30ம் தேதி இரவு தனது பைக்கை வழக்கம் போல வீட்டின் முன்பு சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு தூங்க சென்று உள்ளார். மறுநாள் காலை எழுந்து வந்து பார்த்த போது, அவரது பைக் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும், அந்த வாலிபர் காணாமல் போன தனது பைக்கை தேடிய போது, அந்த இடத்தில் மற்றொரு பைக் சாவியுடன் நிற்பதை கவனித்தார். இதுகுறித்து அந்த வாலிபர் ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் வந்து பார்த்த போது, அங்கு சாவியுடன் நின்ற பைக் ரத்தினபுரி போலீசாரின் ரோந்து பணிக்குப் பயன்படுத்தப்படும் பைக் என்பது தெரியவந்தது.
போலீசாரின் ரோந்து பைக் அங்கு நின்றிருந்ததால் குழப்பம் அடைந்த போலீசார், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் மர்ம நபர் ஒருவர், முதலில் ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷனுக்கு சொந்தமான ரோந்து பைக்கை திருடி அந்தப் போலீஸ் பைக்கிலேயே சிவானந்தா காலனி ராதாகிருஷ்ணன் சாலைக்கு வந்து இருந்ததும், பின்னர், அந்தப் போலீஸ் பைக்கை அங்கு சாவியுடன் நிறுத்தி விட்டு, மற்றோரு பைக்கைத் திருடிக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்றதும் தெரியவந்தது.
போலீசாரின் பைக்கை திருடி வந்து, அதை ‘எக்ஸ்சேஞ்ச்’ செய்வது போல விட்டு விட்டு வேறொரு பைக்கை திருடிச் சென்ற அந்தப் பலே திருடன் யார் ? என்பது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

