கோவை: கோவை மாவட்ட போலீசார் இன்று மாவட்ட முழுவதும் நடத்திய சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் மூலம் பொதுமக்களின் 518 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைகளை போலீசார் நேரில் கேட்டு தீர்வு காணும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில், மாவட்ட காவல் துறைக்கு உட்பட்ட 6 காவல் உட்கோட்டங்களிலும் இன்று சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்த சிறப்பு முகாம்களில் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக போலீசாரிடம் பொதுமக்கள் 679 மனுக்கள் அளித்தனர்.இதில் 518 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டன. 161 மனுக்கள் அடுத்த கட்ட விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டன.
Advertisement

பொதுமக்கள் தங்கள் குறைகளை பிறவேலை நாட்களில், உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களில் தெரிவிக்கலாம் என்று காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

இந்த முகாமில் மாவட்ட இலவச சட்ட ஆலோசனை மையத்தின் சட்ட ஆலோசகரும் பல்வேறு துறை அதிகாரிகளும், காவல் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்