கோவை: 25 ஆயிரம் அரிசியில் வாக்கு வீரன் ஓவியத்தை வடிவமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார் கோவையை சேர்ந்த ஓவிய ஆசிரியர்.
கோவையை சேர்ந்த ஓவிய ஆசிரியர் 25,000 அரிசியை கொண்டு 100% வாக்குபதிவு என்பதை ஓவியமாக வடிவமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 100% வாக்குப்பதிவு என்பதை வலியுறுத்தும் வண்ணம் தேர்தல் ஆணையம், மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

அதே சமயம் பல்வேறு கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களும் மக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றன. தன்னார்வலர்களும் பல்வேறு வழிகளில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவையை சேர்ந்த மனோகரன் என்ற தனியார் பள்ளி ஓவிய ஆசிரியர் மக்களிடையே 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 25,000 அரிசியை கொண்டு கோவை மாவட்ட தேர்தல் எம்பளமான வாக்குவீரன் இருவாச்சி பறவை ஓவியத்தை வடிவமைத்துள்ளார். அதில் 15,000 அரிசியில் 100% Vote என்று எழுதி உள்ளார். 80 மணி நேரத்தை செலவழித்து இதனை வடிவமைத்துள்ளார்.
தேர்தலில் அனைவரும் வாக்களித்து 100% என்பதை உறுதி செய்ய வேண்டுமென்றும் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்று அவர் தெரிவித்துள்ளார்.


