கோவை செம்மொழி பூங்கா: முதல் நாளில் திரண்ட 4 ஆயிரம் பேர்

கோவை: கோவை செம்மொழி பூங்காவை முதல் நாளில் 4 ஆயிரம் பேர் கண்டு ரசித்துள்ளனர்.

காந்திபுரம் சிறைச்சாலை மைதானத்தில் 45 ஏக்கரில் ரூ.208.50 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை கடந்த மாதம் 25ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த பூங்காவில் 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை, திருவோட்டு மரம், கலிபுடா, வரிகமுகு, மலை பூவரசு, எலிச்சுழி, குங்குமம் மரம் உள்ளிட்டவையும் உள்ளன.

செம்மொழி வனத்தில் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள மரங்கள் மற்றும் செடிகள் நடப்பட்டு உள்ளன. கடையேழு வள்ளல்களின் கற்சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன. திறந்தவெளி அரங்கம், பூங்காவில் பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு அறை, உணவகம், ஒப்பனை அறை, சில்லறை விற்பனை நிலையம், செயற்கை நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவு வாயில் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் பூங்காவில் இடம்பெற்றுள்ளன.

நுழைவுக்கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.5ம் வசூலிக்கப்படுகிறது. வீடியோ கேமரா எடுக்க ரூ.50, நடைப்பயிற்சி மேற்கொள்ள மாத கட்டணம் ரூ.100, ஆண்டு கட்டணம் ரூ.1000, திரைப்பட ஒளிப்பதிவுக்கு ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரமும், குறும்பட ஒளிப்பதிவுக்கு ஒரு நாளைக்கு ரூ.2 ஆயிரமும் வசூலிக்கப்படுகிறது.

இந்த பூங்கா நேற்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. இதையடுத்து நேற்று கோவை மட்டுமின்றி புறநகர் பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் குடும்பம், குடும்பமாக வந்து செம்மொழி பூங்காவில் உள்ள அம்சங்களை கண்டுரசித்தனர்.

பள்ளி, கல்லூரி மாணவிகளும் அதிகளவில் வந்திருந்தனர். அவர்கள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தோட்டத்துக்குள் புகுவதை தடுக்கவும், பூக்கள் பறிப்பதை தடுக்கவும் ஷிப்ட் முறையில் 25 பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணித்தனர். முதல் நாளான நேற்று 4 ஆயிரம் பேர் செம்மொழி பூங்காவை கண்டு ரசித்ததோடு அதன் சிறப்பம்சங்களை வெகுவாக பாராட்டினர்.

நாளை, மற்றும் நாளை மறுநாள் விடுமுறை நாள் என்பதால் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்…

கோவை: கோவையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல்...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவை: கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் மத்திய...