கோவை: கோவை சொக்கம்புதூர் மயான கொள்ளை பூஜையில் ஆக்ரோசமாக எலும்பை கடித்து பூசாரி வழிபாடு நடத்தினார்.
மகா சிவராத்திரி நிகழ்வையொட்டியும், மாசி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் மயான கொள்ளை நிகழ்வு நடைபெறும்.
அதேபோல் கோவை சொக்கம்புதூர் பகுதியில் உள்ள சுடுக்காட்டிலும் ஆண்டுதோறும் மயான கொள்ளை நிகழ்வு நடைபெற்று வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டும் மயான கொள்ளை நிகழ்ச்சி நேற்று நள்ளிரவில் விமர்சையாக நடைபெற்றது. இதனையொட்டி சுடுக்காட்டில் உள்ள மண்ணில் மாசாணியம்மன் சிலை செய்து அலங்கரிக்கப்பட்டிருந்து.
பம்பை, உடுக்கை, இசைக்க அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து மயானத்திற்கு வந்த கோவில் பூசாரி, மாசாணி அம்மனைச் சுற்றி ஆக்ரோசமாக நடனமாடி பூஜை நடத்தினார்.
மனித எலும்பு
இதனைத்தொடர்ந்து. மாசாணியம்மனின் இருதய பகுதியில் வைக்கப்பட்டிருந்த மனித எலும்பை வாயில் கடித்தபடி ஆக்ரோச நடனமாடினார். இந்நிகழ்வில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூசாரியின் ஆக்ரோச ஆட்டத்தை பார்த்து பக்தர்கள் ஆரவாரத்துடனும் பரவசத்துடனும் மாசாணியம்மனையும் பூசாரியையும் வழிப்பட்டனர்.
இந்த நிகழ்விற்கு பின்னர், மாசாணியம்மன் சிலையில் இருந்து மண் எடுத்து செல்லப்பட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு நள்ளிரவில் நடத்தப்படும் மயான கொள்ளை நிகழ்வில் கலந்து கொண்டு வழிப்பட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என நம்பப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருக்கல்யாண வைபவம் மற்றும் குண்டம் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது.

